நாகர்கோவில்: நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகளில் பெண் கல்வி மையங்கள் தொடங்க யுஜிசி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. பெண்களுக்கு கல்வியில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதே இதன் நோக்கம் ஆகும். பல்வேறு நிலைகளில் உள்ள பெண்களின் ேதவைகளுக்கு இதன் வாயிலாக பரிகாரம் காணவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெண்களை சுயமாக வாழ கற்றுகொடுத்தல், தன்னம்பிக்கையை அதன் வழியாக ஏற்படுத்துதல், சமூக மேம்பாட்டிற்கு அதன் வழியாக வித்திடுதல் போன்றவையும் முக்கிய நோக்கங்கள் ஆகும். அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களுக்கும், யுஜிசி சட்டங்களின்படி செயல்படுகின்ற கல்லூரிகளுக்கும் இந்த பெண் மையத்திற்காக விண்ணப்பிக்கலாம்.பல்கலைக்கழகங்களுக்கு வருடத்திற்கு ₹35 லட்சமும், கல்லூரிகளுக்கு ₹25 லட்சமும் மானியமாக வழங்கப்படும். செயல்பாடுகளை மேற்பார்வை செய்ய கமிட்டிகள் உருவாக்கப்பட வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களுக்கு அதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில பெண்கள் ஆணையம், பெண்கள் மேம்பாட்டிற்காக செயல்படுகின்ற அமைப்புகள் இதன் பிரதிநிதிகளாக இடம்பெறுவர். தொடர்புடைய துறைகளில் இரண்டு பேராசிரியர்கள், பெண்கல்வியில் நிபுணத்துவம் பெற்ற இருவர், மத்திய அரசின் ஆசிரியர் பொறுப்பு அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழு மேற்பார்வை செய்யும். கல்லூரிகளில் முதல்வர்தான் இந்த பெண் கல்வி திட்டத்திற்கும் தலைவராக இருப்பார். பெண் கல்வி பிரிவின் தலைவர், இரண்டு நிபுணர்கள், இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம் பெறுவர். உறுப்பினர் செயலரை கல்லூரி முதல்வர் நியமனம் செய்து கொள்ளலாம்.
பல்வேறு பல்கலைக்கழகங்கள், அரசு துறை நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுதல் அவசியம். உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் தொடர்புடைய குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அதற்கேற்ற பாட திட்டங்கள் தயார் செய்வதும் மத்திய அரசின் பொறுப்பு ஆகும். பெண் கல்வி மையத்தின் பொறுப்பு பெண் பேராசிரியருக்கு வழங்கப்படும். இதர பயிற்சி வகுப்புகளின் தலைவர்களுக்கான பொறுப்பும், கடமைகளும் இவர்களுக்கும் உண்டு. வழங்கப்படுகின்ற மானியத்தில் 45 சதவீதம் பல்கலைக்கழகங்களின் நியமிக்கப்படுகின்ற மத்திய அரசு பணியாளர்களுக்காக வழங்க வேண்டும். கல்லூரிகள் 40 சதவீதம் வழங்க வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.