×

வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: மாவட்ட கலெக்டர்களுக்கு இயக்குனரகம் கடிதம்

சென்னை: வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியின இயக்குனரகம் மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 2006ல் வன உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் படி கடந்த 2005 டிசம்பர் 13ம் தேதிக்கு முன்பாக காடுகளில் வசித்து விவசாயம் செய்து வரும் பழங்குடியினருக்கு அந்த நிலங்கள் பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  இதற்கு விலங்குகள் நல தன்னார்வ அமைப்பு ஒன்று கடும் எதிர்ப்பு தெரிவித்து. இதுதொடர்பான வழக்கு கடந்த பிப்ரவரி 13ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, நாடு முழுவதும் 16 மாநிலங்கள் தங்கள் வனப்பகுதியில் இருக்கும் பழங்குடிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டா மனுக்கள் எண்ணிக்கை, பட்டா நிராரிக்கப்பட்ட மனுக்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தது.

இந்தவழக்கை விசாரித்த நீதிபதி பட்டா நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பழங்குடிகளை ஏன் வெளியேற்றவில்லை என்பது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டனர். இந்த நிலையில், தமிழகத்தில் 7.95 லட்சம் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இதில், வனப்பகுதியில் வசிக்கும் 34,302 பேர் பட்டா கோரி மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில், 9029 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9,029 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பழங்குடியின மக்களை சுப்ரீம் கோரட்் உத்தரவுப்படி காடுகளில் இருந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகுதியானவர்களை கண்டறிந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதை தொடர்ந்து பழங்குடியின இயக்குனர் அலுவலகம் சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளது. அதில், வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பட்டா வழங்கப்படா விட்டால் அதற்கான உரிய காரணத்தை அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும். வரும் ஜூன் மாத இறுதியில் பட்டா வழங்கியவர்கள் விவரம், நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மீதான விவரம், வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் விவரத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருப்பதாக பழங்குடியின இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


Tags : residents ,forest ,Directorate ,District Collectors , Forest, Tribal, Patta, District Collectors
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...