சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணு உலைக்கழிவுகளை சேமிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே அணு உலை கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை 5 ஆண்டுகளில் ஏற்படுத்திட வேண்டும்” என்பது உச்ச நீதிமன்றம் விதித்த மிக முக்கியமான நிபந்தனை என குறிப்பிட்டுள்ளார்.
2022ம் ஆண்டுக்குள் அணுக்கழிவு மையம் கட்டி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் ராதாபுரத்தில் பொதுமக்கள் “கருத்துக் கேட்புக் கூட்டம்” நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியளிப்பதாகவும் அதிமுக அரசின் கீழ் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே இந்த அறிவிப்பை அறிவித்திருப்பதிலிருந்து அதிமுக அரசு அலட்சியத்தின் மொத்த உருவமாக காட்சி அளிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே அணு உலைக் கழிவுகளை வைப்பதற்கான வசதிகளை உருவாக்குவது மனித உயிர்களை “சோதனைக்கூடப் பொருட்களாக” ஆக்குவதற்கு மத்திய- மாநில அரசுகள் முயற்சிக்கின்றன என்ற சந்தேகமே எழுவதாக குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராதாபுரம் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.