×

சிவகங்கை மாவட்டத்தில் கேள்விக்குறியாகும் தொழில் வளம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் போதிய தொழில் வளங்கள் இல்லாததால் வெளிநாடுகள், வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை தொடர்ந்து வருகிறது. சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் தவிர குறிப்பிட்டு சொல்லும்படி தொழில்கள் எதுவும் இல்லை. சிவகங்கை அருகே கோமாளிபட்டி சேந்தி உடையநாதபுரத்தில் தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான கிராபைட் கனிம நிறுவனம் (டாமின்) உள்ளது. 1994ம் ஆண்டு இயங்க தொடங்கிய இந்த ஆலையில் நிலத்தில் உள்ள கிராபைட் கல்லை வெட்டியெடுத்து அதிலிருந்து கிராபைட்டை பவுடராக பிரித்து எடுக்கும் பணி நடக்கிறது. தொழிற்சாலை தொடங்கியபோது எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் போதிய விரிவாக்கத் திட்டமின்றியே தற்போதும் செயல்பட்டு வருகிறது. தொடக்க நிலையில் இருந்ததுபோல் தற்போதும் 200 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். மத்திய அரசுக்கு சொந்தமான காரைக்குடி மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காளையார்கோவில் காளீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் மில் உள்ளிட்ட சில மத்திய அரசு நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்கள் சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர்.

இவைகள் தவிர அரசு நிறுவனங்கள் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. தனியார் டெக்ஸ்டைல்ஸ் மில்கள் சுமார் 10 மில்கள் உள்ளன. மானாமதுரை, சிவகங்கை உட்பட சில இடங்களில் சிறிய அளவிலான சிப்காட் அமைக்கப்பட்டு அங்கு தனியார் தொழிற்சாலைகள் நடத்தி வருகின்றனர். இதிலும் கூடுதல் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இல்லை. சிவகங்கை அருகே வேலைவாய்ப்பு உருவாகும் என தொடங்கப்பட்ட ஸ்பைசஸ் பார்க் செயல்பாடில்லாமல் முடங்கியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் என்ன நிலையில், எத்தனை தொழில் நிறுவனங்கள் இருந்ததோ அதே நிலையிலேயே தற்போதும் உள்ளது. அரசு சார்பில் கூடுதல் சிப்காட்டுகள், தொழிற்சாலைகள், கூடுதல் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டும் பல ஆண்டுகளாக இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.

ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களிலும் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்க்கின்றனர். இதனால் பெரும்பலானோர் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலேயே வேலை பார்த்து வருகின்றனர். சென்ட்ரிங், கொத்தனார், எலெக்ட்ரீசியன், பிளம்பர் உள்ளிட்ட கட்டிட தொழிலாளர்களாகவும், ஓட்டல் தொழிலாளர்களாகவுமே அதிகப்படியானோர் செல்கின்றனர். வர்த்தக சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தொடர் வறட்சி காரணமாக விவசாய தொழிலும் குறைந்து வருகிறது. விவசாய தொழில் தெரிந்தவர்கள் இன்று எந்த வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டிய அவலநிலையில் உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அரசு சார்பில் அதிக தொழிலாளர்கள் வேலைபார்க்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும். தனியார் தொழிற்சாலைகளும் குறிப்பிட்ட மாவட்டங்களியே தொடங்கப்படுகிறது. சிவகங்கை போன்ற மாவட்டங்களுக்கு அவற்றை பரிந்துரை செய்யலாம். காலம், காலமாக வெளி நாடுகள், வெளி மாவட்டங்களுக்கு சென்று பணிபுரியும் நிலையை மாற்ற தொழில் வளத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Sivagangai District , Sivagangai, industrial resource
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து