×

சார்நிலை கருவூல நிர்வாகத்தை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம்

தாம்பரம்: அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பளம் இல்லை என மிரட்டும் போக்கை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என கோரி தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சார்நிலைக் கருவூல அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் டேனியல் கூறுகையில், ‘‘அரசு துறையில் இருக்கும் ஊழியர்களை மிரட்டக்கூடிய வகையில் பல்வேறு விஷயங்களை கருவூல துறை செய்து கொண்டிருக்கிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். துறையின் பணிகளை தனியாருக்கு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் அந்த தனியார் நிறுவனம் வேலையை சரியாக செய்யாமல் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதை சரி செய்வதற்கு துறையில் இருக்கக்கூடிய ஊழியர்களை மிரட்டுகின்ற நிலை உள்ளது. அவர்கள் செய்த தவறுகளை இங்கே இருக்கிற ஊழியர்கள் சரி செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். அப்படி அந்த குறைகளை சரி செய்யவில்லை என்றால் இந்த மாதம் சம்பளம் கிடையாது என்று மிரட்டுகின்றனர்.

புதிய திட்டத்தில் பல்வேறு விசயங்களை, தகவல்களை அப்லோட் செய்யவேண்டி உள்ளது. அதை எதுவும் செய்யமுடியாத அளவிற்கு சர்வரில் மிக பெரிய குளறுபடிகள், பிரச்சனைகள் உள்ளன. சர்வர் மிகவும் தாமதமாக இயங்குகிறது. ஒரு அடிப்படை கட்டமைப்புகளை செய்யாமல் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். முறையாக எல்லா அடிப்படை வசதிகளையும் செய்த பின்னர் இந்த திட்டத்தை அறிமுகம் செய்யவேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. 90 லட்சம் படித்த இளைஞர்கள் தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு முறையான சம்பளத்தில் பணிகளை வழங்குவதில்லை. எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிவில் அடுத்த கட்டமாக 25ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு அடுத்த கட்டமாக ஜூலை 2ம் தேதி கருவூல துறை ஆணையர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்’’ என தெரிவித்தார்.

Tags : Government employees ,Treasury , Struggle
× RELATED ஜம்மு – காஷ்மீரில் பிரதமர் மோடி...