×

பட்டேல் போன்ற தலைவர்கள் கஷ்டப்பட்டு ஒருங்கிணைத்த நாட்டை கூறுபோடும் செயலை அனுமதிக்க முடியாது: பொதுக்கூட்ட வழக்கில் ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டு ஒருங்கிணைத்த இந்தியாவை, கூறு போட முயலும் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது  என சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாகை மாவட்டம், சீர்காழி பேருந்து நிலையம் அருகில், ஜூன் 8ம் தேதி (நாளை) வட இந்தியர்களின் வேட்டைக் காடாகும் தமிழகம் என்ற பெயரில் தந்தை பெரியார் தி.க சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்  தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த கோவை.ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்திற்கு அனுமதி கோரி கொடுத்த மனுவை சீர்காழி போலீசார் நிராகரித்தனர்.

இதை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின், நாகை மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் என்ற பிரிவினையை மக்களிடையே தூண்டும் வகையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இந்த கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அரசுத் தரப்பின்  வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் சிறப்பம்சம். சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டு ஒருங்கிணைத்த இந்தியாவை, கூறு போட முயலும் செயலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற கூட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது. வேறு தலைப்புடன் கூட்டம் நடத்துவது தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று அறிவுறுத்தி,  விசாரணையை வரும் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.




Tags : Leaders ,Patel ,state ,Supreme Court , Patel, Leaders, Public Case, Court
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...