திம்பு: மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று பூடான் சென்றார். மத்திய வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், கடந்த 30ம் தேதி பொறுப்பேற்றார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக அவர் பூடான் சென்றுள்ளார். 2 நாள் பயணமாக சென்ற அவரை அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் தான்டி டோர்ஜி வரவேற்றார். அவர் அந்நாட்டு அரசர் ஜிக்மி கேசர் நாம்கியால் வாங்சங்கை சந்தித்து பேச உள்ளார்.
இது குறித்து ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மீண்டும் பூடான் சென்றது சிறப்பானது. உளங்கனிந்த வரவேற்பு மனதை தொட்டது’ என்று பதிவிட்டுள்ளார். இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக பூடான் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவானது அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெளியுறவு அமைச்சரின் இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார மேம்பாடு, நீர்மின் திட்ட ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.