×

சுற்றுலா சென்றபோது பரிதாபம்: துபாய் பஸ் விபத்தில் 12 இந்தியர்கள் பலி

துபாய்: துபாயில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில், 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 31 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. அங்குள்ள, அல் ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் பேருந்து வந்தது. அப்போது, பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்த பகுதியில் எதிர்பாராத விதமாக பேருந்து நுழைந்தது. இதனால், அங்கிருந்த உயரமான தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் இந்தியர்கள். மேலும், 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து துபாயில் உள்ள இந்திய தூதரகம் தனது டிவிட்டரில், ‘துபாய் பேருந்து விபத்தில் 12 இந்தியர்கள் இறந்தனர் என்பதை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த பயங்கரமான சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். தூதரக அதிகாரிகளும், ரஷிதியா போலீசாரும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளது. துபாய் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “அடையாளம் தெரியாத நிலையில் இன்னும் சில சடலங்கள் இருக்கின்றன. உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம்,” என்றனர்.

கேரளாவை சேர்ந்தவர்கள்

விபத்தில் இறந்த ராஜகோபாலன், பெரோஷ் கான் பதான், ரேஷ்மா பெரோஷ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன், அரக்காவிட்டீல், கிரன் ஜானி, வாசுதேவ், திலக்ராம் ஜவஹர் தாகூர் ஆகியோர் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாகிஸ்தானை சேர்ந்த ஷாபீக் என்பவரும் இந்த விபத்தில் இறந்துள்ளார்.

ஜெய்சங்கர் அனுதாபம்

பூடான் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டரில், ‘துபாயில் துரதிருஷ்டவசமாக நிகழ்ந்த பேருந்து விபத்தில் இறந்த 12 இந்தியர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Tags : Indians ,bus accident ,Dubai , Dubai
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...