நாமக்கல்: தன்னிச்சையாக அமைச்சர் மணிகண்டன் செயல்படுவதால், கடந்த ஓராண்டுகளாக என்னால் எனது தொகுதிக்குள் செல்ல முடியவில்லை.இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் கூறுவேன் என எம்எல்ஏ கருணாஸ், நாமக்கல்லில் நேற்று தெரிவித்தார்.நடிகர் கருணாஸ் எம்எல்ஏ நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஓராண்டாக எனது சொந்த தொகுதியான திருவாடானைக்கு என்னால் செல்ல முடியவில்லை. இதற்கு அமைச்சர் மணிகண்டன்தான் காரணம். அவர் தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் செயல்படுகிறார். தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்களுக்குகூட எனக்கு அழைப்பிதழ் அனுப்புவதில்லை. அமைச்சரின் பேச்சை கேட்டுக்கொண்டு, அதிகாரிகள் செயல்படுகிறார்கள். இதனால் வாக்களித்த எனது தொகுதி மக்களை சந்திக்க முடியவில்லை.
அமைச்சர் மணிகண்டனின் செயல்பாடுகள் குறித்து, ஏற்கனவே 2 முறை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து புகார் அளித்துள்ளேன். மீண்டும் முதல்வரை சந்தித்து அமைச்சர் மீது புகார் அளிப்பேன். இப்போதுகூட எனது தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் கொடுக்கும் விழாவுக்கு எனக்கு அழைப்பு அனுப்பவில்லை. இதுகுறித்து டிஆர்ஓவிடம் கேட்டால் மழுப்பலாக பதில் சொல்கிறார். எனது தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்கள் குறித்து அதிகாரிகள் என்னை கலந்து ஆலோசிக்க வேண்டும். முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்துவேன். அதிமுக அரசு மீது சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் போது, அது பற்றி முடிவு செய்வேன். இவ்வாறு கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்தார்.