சென்னை: அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 903 பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ரமணி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை. போதுமான ஆசிரியர்கள், கட்டிடம், அடிப்படை வசதிகள், காற்றோட்டமான சூழல் ஆகியவை இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மே 24ம் தேதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், அங்கீகாரம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் செயல்படும் 903 பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் 30 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த விளக்கத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.