×

வயநாட்டில் வாக்காளர்களுக்கு கொட்டும் மழையிலும் ராகுல் நன்றி தெரிவித்தார்

திருவனந்தபுரம்: வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கு, கொட்டும் மழையிலும் ராகுல் நன்றி தெரிவித்தார். கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். வயநாடு தொகுதியில் அவர் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை அமோக வெற்றி பெற செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி நேற்று கேரளா வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், பிற்பகல் 2.15 மணிக்கு கோழிக்கோடு வந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில காங்கிரஸ் தலைவர்கள் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரமேஷ் சென்னித்தலா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் அவர் வயநாடு தொகுதிக்கு உட்பட்ட காளிகாவு, நிலம்பூர், எடவன்னா, அரீகோடு ஆகிய இடங்களில் வாகன பேரணி நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது மழை பெய்தது. ஆனால், அதை பொருட்படுத்தாது ராகுல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுபோல் இன்றும், நாளையும் தொகுதி முழுவதும் வாகன பேரணி நடத்தி ராகுல்காந்தி வாக்காளர்களை சந்திக்கிறார். நாளை மதியம் கோழிக்கோட்டில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார். ராகுல் வருகையையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Rahul ,voters ,country , Rahul Gandhi
× RELATED சொல்லிட்டாங்க…