சென்னை : கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது இயக்குனர் பாலச்சந்திரன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை குறித்து மேலும் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது,தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது, மேலும் தென் இந்தியாவில் தெற்கு பகுதியில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு -மேற்காக திசை மாறும் பகுதி நிலவுகிறது, மேற்கு கடற்கரை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றுழத்த தாழ்வு நிலை நிலவும் நிலையில் நாளை தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குக் கூடும், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். தென் மேற்கு பருவமழையானது தென் மாநிலங்களில் 64 -74செமீ மழையை தரும் எனக் கூறினார். வெப்பநிலையை பொறுத்தவரை தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த 24மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளதாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சுரளகோடு மற்றும் சேவலோகத்தில் தலா 1 செமீ மழைப் பதிவாகி உள்ளது என்றும் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.