×

பிரேசில் காவல்துறை முதற்கட்ட விசாரணை : பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு கால்பந்து வீரர் நெய்மர் திட்டவட்ட மறுப்பு

பாரிஸ்: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரிடம் அந்நாட்டு போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் பாரிஸ் சென்ற நெய்மர், தனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பிரேசிலைச் சேர்ந்த இளம்பெண்ணையும் சொந்த செலவில் பாரிஸ் வரவழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த மாதம் 15ம் தேதி ஓட்டலில் தங்கி இருந்த அந்தப் பெண்ணை சந்திக்க குடிபோதையில் நெய்மர் சென்றதாகவும், அப்போது மிகவும் ஆக்ரோசத்துடன் அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சாவ் பாலோ போலீசில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், நெய்மர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரிடம் அந்நாட்டு போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். பிரேசில் தலைநகர் ரியோவில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் நெய்மரிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதில் நெய்மர் மீது இளம் பெண் அடுக்கியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. நீண்ட விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நெய்மர், தமக்கு ஆதரவு தெரிவித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். பாலியல் புகார் கூறிய மாடல் அழகி நாஜில்லாவின் புகைப்படம் மற்றும் அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளை சமுக வலைத்தளங்களில் வெளியிட்டதால் நெய்மருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனிடையே நெய்மரை நாஜில்லா ஓட்டல் அறையில் வைத்து தாக்குவது போல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 


Tags : Brazil Police Preliminary Inquiry: Footballer Neymar , Sexual, Neymar, football player, Brazil
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...