புதுடெல்லி: லோக்பால் அலுவலக ஆலோசகர் பதவிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் செய்யும் மற்றும் லஞ்சம் பெறும் அரசியல்வாதிகள் அல்லது அரசு அதிகாரிகளை மக்களே நேரடியாக தண்டிக்கும் வகையில் லோக்பால் சட்டம் கடந்த 2013ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதன்படி லோக்பால் என்ற அமைப்பு மத்தியிலும், லோக் ஆயுக்தா என்ற அமைப்பு மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடந்த மார்ச் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த ஏப்ரலில் திலிப் குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரி லோக்பால் அலுவலகத்தின் சிறப்பு பணி அதிகாரியாக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த அமைப்பில் தலைவர் தவிர, 8 உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இதில் 4 பேர் நீதித்துறை சார்ந்தவர்களாகவும் மற்ற 4 பேர் நீதிமன்றம் சாராதவர்களாக இருக்கவேண்டும்.
இதன்படி லோக்பால் அமைப்புக்கு சாஸ்திர சீமாபால் படையின் முன்னாள் பெண் தலைவர் அர்ச்சனா ராமசுந்தரம், மகாராஷ்டிரா முன்னாள் தலைமை செயலாளர் தினேஷ் குமார்ஜெயின், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி மகேந்திர சிங், குஜராத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இந்திரஜித் பிரசாத் நீதித்துறை சாராத உறுப்பினர்களாகவும்,
நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் திலிப் போசாலே, பிரதிப் குமார் மொகந்தி, அபிலஷாகுமாரி, அஜய் குமார் திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் லோக்பால் அமைப்புக்கு உதவும் வகையில் ஆலோசகர் பதவியை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை செயலாளர் அல்லது துணை பதிவாளர் அளவிலான ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.