×

14ம் தேதி முதல் 3 நாள் நடக்கிறது திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா: தெப்பம் அமைக்கும் பணி தீவிரம்

திருவாரூர்: திருவாரூரில் தியாகராஜசுவாமி கோயிலின் தெப்ப திருவிழா வரும் 14,15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறுவதையொட்டி தெப்பம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் உள்ளது.  இது சைவ சமய தலங்களில் முதன்மையான தலமாகும். இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது. இதேபோல் இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், கமலாலய குளமும் இருந்து வருகிறது. கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர விழாவில் ஆழி தேரோட்ட விழாவும், பின்னர் கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆழித்தேரோட்ட விழா கடந்த ஏப்ரல் மாதம் 1ம்தேதி நடைபெற்றது. இந்நிலையில் தெப்ப திருவிழா வருகிற 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தற்போது தெப்பம் அமைக்கும் பணி கமலாலய குளத்தில் இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு அடுக்குக்கு 216 பேரல்கள் மூலம் மொத்தம் 2 அடுக்குகளுக்கு 432 பேரல்களை கொண்டு 7 அடி உயரத்தில் சுமார் 600 பேர்கள் அமரும் வகையில் தெப்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 3 சுற்றுகள் வீதம் இசை கச்சேரிகளைக்கொண்டு நடைபெறும் இந்த தெப்ப திருவிழாவானது தினந்தோறும் மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரையிலும், 10 மணி துவங்கி 1 மணி வரையிலும், 2 மணி துவங்கி அதிகாலை 5 மணி வரையிலும் என 3 சுற்றுகளாக சுற்றி வரும். இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் கவிதா தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Thiruvarur Thiagarajaswamy Temple , Thiruvarur Thiagarajaswamy Temple, Teppath Festival
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...