×

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி: தெலங்கானாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா...ராஷ்டிரிய சமிதியில் இணைய முடிவு

அமராவதி: தெலங்கானாவில் உள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் ஆளும் ராஷ்டிரிய சமிதியில் இணைய முடிவு செய்துள்ளனர். தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், தனது  அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், ஆட்சியை கலைத்து, தேர்தலை சந்திக்க முன்வந்தார். அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவுக்கு போட்டியாக முன்னாள் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான  சந்திரபாபு நாயுடு மெகா கூட்டணி அமைத்தார். தெலுங்கு தேசம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஓரணியில் இணைந்தன. பாஜ தனித்து போட்டியிட்டது. மும்முனை  போட்டியால், தெலங்கானாவில் கடும் இழுபறி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7-ம் தேதி, தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிஜோரம், .சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

119 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 20  இடங்களிலும், பாஜ 2  இடங்களிலும் மற்றும் மற்றவர்கள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர ராவ் முதல்வராக பதவிபேற்றுகொண்டார்.  இதற்கிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையாக மீண்டும் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு 90 இடங்களும், மற்றவைகளுக்கு 102 இடங்களும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சி மட்டும் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தெலங்கானாவில் உள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12பேர் ஆளும் ராஷ்ட்ரிய சமிதியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.ஆர்.எஸ்-சில் இணைத்துக் கொள்ளுமாறு 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  சபாநாயகரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : ELECTIONS ,Congress MLAs ,Telangana , Parliamentary elections, defeat, Telangana, Congress MLA, resignation, Rashtriya Samiti
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!