திருவொற்றியூர்: மணலி புதுநகர் அருகேயுள்ள இடையஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்ரா (35). கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் ஒத்தவாடை காந்தி நகரில் உள்ள சகோதரி வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காலை வீட்டு வாசலில் சித்ரா கோலம் போட்ட போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சித்ராவின் செயினை பறிக்க முயன்றனர்.
செயினை விடாமல் பிடித்துக்கொண்டதால் செயினுடன் தரதரவென்று இழுத்துசென்றனர். சித்ரா கூச்சலிடவே செயினை விட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் சித்ராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசில் சித்ரா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.