நாங்குநேரி: இடைத்தேர்தல் எதிரொலியாக நாங்குநேரி பேரூராட்சியில் அவசர கதியில் சாலைப்பணி நடக்கிறது. இப்பணி முறையாக இல்லாததால் வீடுகள் மூழ்குவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாங்குநேரி பேரூராட்சியில் உள்ள காமராஜர் தெரு மற்றும் கீழ ரதவீதி ஆகியவற்றில் தார்ச்சாலை அமைக்க பல மாதங்களுக்கு முன் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அவசரகதியில் அரைகுறையாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலையின் உயரத்தை அதிகரிப்பதால் அப்பகுதியிலுள்ள வீடுகள், தெருவை விட தாழ்வாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் வீடுகளைப்பாதிக்கும் சாலையின் உயரத்தை அதிகரிக்கக்கூடாது என வலியுறுத்தி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலை அமைப்பதாக செயல்அலுவலர் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.