×

தூத்துக்குடி அருகே பராமரிப்பின்றி பாழானது உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் பாலம்

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி அருகே தெர்மல்நகரில் பராமரிப்பின்றி பாழானதோடு இரு பகுதிகள் இடிந்து விழுந்த பாலமானது, முற்றிலும் இடிந்து விழுந்து உயிர்ப்பலி வாங்க காத்திருக்கிறது. இதனால் அச்சத்திற்கு உள்ளான மக்கள் புதிய பாலம் கட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். தூத்துக்குடி ஸ்பிக்நகர் அடுத்த தெர்மல்நகர், கோயில்பிள்ளை, கேம்ப்-1 பகுதியில் வசிக்கும் மக்கள் தூத்துக்குடி செல்ல பீச் ரோடு மற்றும் திருச்செந்தூர் ரோடுகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலால் தெர்மல் அடுத்த ஒத்தவீடு வழியாக தூத்துக்குடி லைன்ஸ் டவுனுக்கு செல்லும் பாதையை பயன்படுத்துகின்றனர். இப்பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோர் தூத்துக்குடியில் செயல்படும் பள்ளிகளில் படித்து வருவதால் இச்சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலையில் எந்தவித பராமரிப்பும் மேற்கொள்ளபடவில்லை. இதனால் இப்பகுதிகளில் உள்ள சாலைகளும், பாலங்களும் பாழானதோடு சேதமடைந்தன. குறிப்பாக இங்குள்ள பழமைவாய்ந்த பாலத்தின் இருபக்கங்களிலும் உள்ள பகுதிகள் இடிந்து விழுந்துள்ளன. இருப்பினும் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் இந்த பாலத்தின் நடுவில் உள்ள சிறிய பாதை வழியாக மக்கள் அச்சத்துடன் சென்றுவரும் அவலம் தொடர்கிறது. எனவே, மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன்னர் இந்த பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக புதிய பாலம் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர்.

Tags : bridge ,Thoothukudi , Thoothukudi, Residence, Bridge
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...