பொன்னமராவதி : பொன்னமராவதி சிவன் கோயில் திருப்பனிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பொன்னமராவதியில் உள்ள ஆவுடையநாயகி சமேத ராஜாராஜ சோழீஸ்வரர் கோயில் ஊரின் மையப்பகுதியில் உள்ளது. இக்கோயிலில் பிரதோசம், தேய்பிறை அஷ்டமி, சங்காபிஷேகம், திருவாசகம் முற்றோதல், நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு வகையான வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் தொன்மை வாய்ந்த இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இந்நிலையில் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து இக்கோயில் திருப்பனிகள் செய்து கும்பாபிஷேக விழா நடத்த இந்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. இதனையடுத்து திருப்பனிகள் செய்ய நேற்று தொல்லியல் துறை உதவி பராமரிப்பாளர் சங்கர் தலைமையில் மூலவர் சன்னதி, முருகன் சன்னதி, அம்மன் சன்னதி, நவகிரகங்கள் சன்னதி, காலபைரவர் சன்னதி, நடராஜர் சன்னதி, மணிமண்டபம், முன் மண்டபம் ஆகியவைகளை அளவீடு செய்தனர்.
மழைநீர் வெளியேற்ற முடியாமல் தேங்கி நிற்பதை சரி செய்வது, மோசமான நிலையில் உள்ள தென்பகுதி சுற்றுச் சுவரை சீர் செய்வது, கோயில் அருகில் தென்பகுதியில் பொதுப்பணித்துறையின் தண்ணீர் தொட்டியினை அப்புறப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது இளநிலை உதவியாளர் சதீஷ்குமார், கோயில் பூஜகர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.