×

இடைப்பாடி அருகே பெண்கள் சாமி ஆடி குறி சொன்னதால் 9 ஆண்டுக்கு முன் காவிரியில் வீசிய அம்மன் சிலையை தேடும் மக்கள்

* முத்துக்குளிப்பவர்களுடன் சேர்ந்து வேட்டை

இடைப்பாடி : இடைப்பாடி அருகே 9 ஆண்டுக்கு முன்பு காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குளிப்பவர்களை வைத்து 5 மணி நேரம் தேடியும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி ஊராட்சி, ஒட்டப்பட்டியில் கடந்த 9 ஆண்டுக்கு முன்பு அம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்துச்சென்று, பூலாம்பட்டி காவிரி ஆற்றில் போட்டு விட்டு புதிய சிலையை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து, ஆண்டுதோறும் வைகாசி மாதம் கோயில் விழாவை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையி்ல், 100 நாள் வேலை திட்டத்தில் ஏரி வேலைக்கு சென்ற இடத்தில் சில பெண்கள் அருள்வந்து சாமி ஆடியுள்ளனர். அப்போது, பழமையான அம்மன் சிலையை ஆற்றில் வீசியதால்தான், பருவமழை பொய்த்து ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வீசப்பட்ட அம்மன் சிலையை மீட்டு வந்து, மீண்டும் கோயிலில் வைத்து பூஜை செய்தால் மட்டுமே, மழை பெய்து ஊர் செழிக்கும் என அருள்வாக்கு கூறியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி முதல் பூலாம்பட்டி கதவணை மின்நிலைய பராமரிப்பு பணிக்காக, காவிரியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், தண்ணீர் குறைந்து கிடக்கும் ஆற்றில் சிலையை தேட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த மாதம் 27ம் தேதி ஆற்றில் நடந்த தேடுதல் வேட்டையில் சிலை கிடைக்கவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம் தேடிப்பார்த்த கிராம மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், கோயில் விழா நெருங்குவதால் நேற்று 3வது முறையாக தேடும் பணி நடைபெற்றது. இதற்காக மதியம் 1 மணியளவில் பூலாம்பட்டி படித்துறையில் கிராம மக்கள் திரண்டனர்.

 பின்னர், அருள்வாக்கு கூறிய பெண்களுடன் விசைப்படகு மற்றும் பரிசல்களில் காவிரி ஆற்றில் சென்று சிலை கிடக்கும் இடத்தை எலுமிச்சம் பழம் உருட்டி தேடினர். அப்போது, அருள்வாக்கு கூறிய பெண்கள் குறிப்பிட்ட இடத்தில் பாதாள கொக்கி போட்டு துளாவியபோதும் சிலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் ஆற்றுக்குள் இறங்கி தேடிப்பார்த்தும் சிலை கிடைக்கவில்லை. இதையடுத்து, மாலை 6.30 மணியளவில் அவர்களும் வெறும் கையுடன் கரை திரும்பினர். பின்னர், அனைவரும் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். நாளை(இன்று) மீண்டும் சிலையை தேடும்பணியில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற தேடுதல் வேட்டையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அருள்வாக்கு கூறிய பெண்கள் கூறிய இடத்தில் காவிரி ஆற்றில் தேடிப்பார்த்தும் சிலை கிடைக்கவில்லை. இந்நிலையில், வரும் 7ம் தேதி முதல் கதவணை மின்நிலைய பராமரிப்பு பணிக்காக பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பாக சிலை கிடைத்தால்தான் உண்டு. எனவே, தேடி கண்டுபிடிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.


Tags : girls ,goddess ,Kareri , idaipadi, salem,cauvery river, amman statue,
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்