×

தமிழகத்தில் விரைவில் மின்சார பஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை சென்னை, கோவை, மதுரையில் இயக்க சி-40 என்ற பன்னாட்டு அமைப்பின் மூலம் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. ேபாக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மேலாண் இயக்குனர்கள், நிதி மேம்பாட்டு நிறுவனம், சாலை போக்குவரத்து நிறுவனம் உள்ளிட்டவற்றின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:
இரண்டு கட்டங்களாக ரூ.1,500 கோடி செலவில் 5,000 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு, 3,500 பஸ்கள் மக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள 1,500 பஸ்கள் விரைவில் இயக்கப்படும். தமிழகத்தில் முதன்முறையாக மின்சாரத்தில் இயக்கும் பஸ்களை சென்னை, கோவை, மதுரையில் இயக்கிடும் பொருட்டு சி-40 என்ற பன்னாட்டு அமைப்பின் மூலம் செயல்படுத்திட துரித நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-6 தரத்திலான பஸ்களையும், 2 ஆயிரம் மின்சார பஸ்களையும் வாங்கிடும் திட்டம் நடப்பு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் மின்சார பஸ்களை இயக்குவதற்கான முக்கிய வழித்தடங்கள், சார்ஜிங் பாயின்ட்ஸ் அமைத்தல் குறித்து விவரமான திட்ட அறிக்கை அந்நிறுவனத்தின் சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் இதுகுறித்து அறிவிப்பார். 8 போக்குவரத்துக் கழகங்களிலும் ஏறத்தாழ 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். போக்குவரத்துக் கழகங்களின் பணிகளை மேம்படுத்திடும் வகையில் அண்மையில் 14 பொது மேலாளர்களுக்கும், மேலாண் இயக்குனர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கருத்தில் கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Wijepaskar ,Tamil Nadu ,talks , Electric bus, Minister Vijayapaskar
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...