பெரம்பூர்: தண்டையார்பேட்டை - எண்ணூர் நெடுஞ்சாலையில் பவர்ஹவுஸ் பகுதியில் மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்பு பெறுவது மற்றும் இதர புகார்கள் தெரிவிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இங்கு வந்து செல்கின்றனர். தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைந்துள்ள இந்த மின்வாரிய அலுவலக கட்டிடத்தில் கட்டண வசூலிப்பு அறை, உதவி பொறியாளர்கள் அறை, பொருட்கள் இருப்பு அறை உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இந்நிலையில், இந்த கட்டிடத்தின் முதல் மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் சிதிலமடைந்து, பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மின் கட்டணம் செலுத்த வரும் மக்கள் அச்சத்துடன் இந்த படிக்கட்டை பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து ‘‘தினகரன்’’ நாளிதழில் கடந்த மாதம் 29ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, சிதிலமடைந்த படிக்கட்டு இடித்து அகற்றப்பட்டது. பின்னர், அங்கு புதிய படிக்கட்டு கட்டுவதற்கு ₹3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதையொட்டி, முதல் தளத்தில் செயல்பட்டு வந்த பிரிவுகள் தற்காலிகமாக தரை தளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.