×

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புராதன மற்றும் பழமையான கோவில்களில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டது. இவற்றை, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடத்தி, சர்வதேச கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு படையை உருவாக்கினார். பின்னர் கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை சிறப்பு நீதிமன்றமாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் காணாமல் போன சிலைகள் குறித்து இந்த தனிப்படை விசாரிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்து உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோரை கொண்ட அமர்வை நியமித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அமைர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை நியமித்ததற்கான அறிவிப்பாணையை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜோதிராமன் மாற்றியமைத்துள்ளார். இனிமேல் சிலைக்கடத்தல் தொடர்பான பொதுநல வழக்குகளை, பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிலைக்கடத்தல் வழக்கில் கைதாகும் நபர்களின் ஜாமீன் மனுக்களை பிற வழக்கின் ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் நீதிபதிகளே விசாரப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : session ,Madras High Court , Statue trafficking,case,special session, Special Session,Chennai High Court
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு