திருவொற்றியூர்: மாதவரம் மேம்பாலம் அருகே நள்ளிரவில் போதையில் தூங்கி கொண்டிருந்தவரின் மர்ம உறுப்பை கடித்து குதறிவிட்டு தப்பியோடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் நாராயணன் (30). இவர், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு இரும்பு கடையில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் ரெட்டேரி மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திய நாராயணன், போதை தலைக்கேறியதும் மேம்பாலம் அடியில் தூங்கி விட்டார். இந்நிலையில், நள்ளிரவில் அந்த வழியாக சென்ற ஒரு மர்ம ஆசாமி, திடீரென நாராயணனின் மர்ம உறுப்பை கடித்து குதறிவிட்டு தப்பி உள்ளார். இதனால், நாராயணன் வலியில் அலறித் துடித்தார். அந்த வழியாக சென்றவர்கள் நாராயணனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, தப்பியோடியவர் சைக்கோ ஆசாமியா என விசாரித்து வருகின்றனர். கடந்த வாரம் இதே ரெட்டேரி மேம்பாலம் அருகில் கொளத்தூரை சேர்ந்த அஸ்லாம் பாஷா என்பவர் மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.