சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் புலவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை தமிழ்ச் சங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில், தமிழ் இலக்கியச் செறிவு, தமிழ் இலக்கிய ஆளுமை, இலக்கணப் புலத்தை மேம்படுத்துவதற்காகத் தமிழ் மரபுக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும் தமிழ்ப்புலமை வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. பி.லிட் முடித்து அதன் தொடர்ச்சியாக 6 மாத தமிழ்ப் பண்டிதர் பயிற்சியும் முடித்தவர்களுக்கு, 1987 முதல் அரசுப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என பி.விருத்தாசலனார், கி.த.பச்சையப்பன் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, 2009ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது பிறப்பித்த அரசு உத்தரவின்படி, ஆயிரக்கணக்கானவர்கள் அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில், மொழிப்பாட ஆசிரியர்கள், கல்வியியல் கல்விக்கு (பி.எட்) இணையாகக் கருதப்படுகின்றது. மத்திய அரசு வெளியிட்ட அரசாணையின்படி, “ஆசிரியர்களுக்கு தகுதி காண் தேர்வு நடத்த வேண்டும். மொழி ஆசிரியர்கள் குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், மாநில அரசு மேற்கொண்ட முடிவின்படி, தமிழ்ப்புலமைப் படிப்புகளில் தகுதி பெற்றவர்கள், கடந்த 2017 வரையிலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித் தேர்வு எழுதி உள்ளனர். ஆனால், தற்போது தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு ஆணை 70ல், ஆசிரியர் தகுதிக்கான தேர்வு 2019ல், தமிழ்ப் பண்டிதர்கள், தேர்வு எழுதுவதற்கான தகுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால், 40,000க்கும் மேற்பட்ட தமிழ்ப்பண்டிதர்கள், தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளனர். எனவே, தமிழக அமைச்சரவை இந்த பிரச்னையில் விரைவில் முடிவு எடுத்து, தமிழ்ப் பண்டிதர்கள் தகுதித் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.