×

மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் தமிழர்களின் உணர்வோடு மத்திய அரசு விளையாட வேண்டாம்

சென்னை: தமிழர்களின் உணர்வோடு மத்திய பாஜ அரசு விளையாட வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று காலை நடந்தது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், தயாநிதி மாறன் எம்பி, கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* சட்டமன்ற ஜனநாயகத்திற்கும்,  ஆரோக்கியமான விவாதங்களுக்கும் அடையாளமாக விளங்கிய கலைஞர் பிறந்தநாளை  முன்னிட்டு, நாமெல்லாம் இங்கே கூடியிருக்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக  உள்ளது. சமத்துவம், சமூகநீதி, மதசார்பின்மை, ஏழை எளிய விளிம்பு  நிலை மக்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வளர்ச்சி, அன்னை தமிழுக்கு அணி சேர்த்த  அடுக்கடுக்கான சாதனைத் திட்டங்கள், ஐந்து முறை முதலமைச்சராக இருந்து தமிழ் நாட்டின்  சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு சாரம் நிறைந்த  சாதனைத் திட்டங்கள், இந்தியாவின் ஜனநாயகத்தை  காப்பாற்றுவதற்காக எண்ணற்ற போராட்டங்கள், அர்ப்பணிப்பான செயல்பாடுகள்,  தேசிய அரசியலில் பல குடியரசு தலைவர்களையும் பிரதமர்களையும் உருவாக்கி, தனி முத்திரை படைத்த சாதுர்யம்  ஆகியவற்றின் பொருள் பொதிந்த கொள்கைக் குறியீடாக விளங்குபவர்  முத்தமிழ் அறிஞர் கலைஞர்.கலைஞர் ஊட்டிய தன்மான உணர்வு, அவர் ஏற்றி வைத்த சுயமரியாதைச் சுடர், இந்திய அரசியல் அரங்கில் தமிழகத்துக்கு அவர் சேர்த்த அழியாப் பெருமைகள் எல்லாம் இன்றைக்கும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியிலும், தேசிய அரசியல் தலைவர்கள் மத்தியிலும் வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு அத்தியாயமாக விளங்குகிறது. அப்படிப்பட்ட மகத்தான தலைவரின் பிறந்த நாளினை கொண்டாடும் இந்தவேளையில், திமுக தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக்  கூட்டணி அமோக வெற்றி பெற்று, இந்திய நாடாளுமன்றத்தின்  மூன்றாவது பெரும் கட்சியாக திமுக உருவெடுத்து செம்மாந்து  நிற்கிறது.

* “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற  தனிப் பெரும் முழக்கத்துடன் - கிராமத்தின் திண்ணைகள் முதல் நகரத்தின் தெருக்கள் வரை மக்களைச் சந்தித்து, அனைவரும் வியக்கும் வகையிலான திமுக தலைவரின் ஆக்கப்பூர்வமான  பிரசாரத்தினால் திமுக தலைமையில் அமைந்த கூட்டணிக்கு இந்த மகத்தான வெற்றியை தமிழகம் மற்றும் புதுவை மக்கள் அளித்துள்ளார்கள். இந்த வெற்றியின் மூலம் பெரியார், அண்ணா-கலைஞர் ஆகியோர் பண்படுத்திய பைந்தமிழ் மண்ணின் பெருமை மற்றும் திராவிட இயக்கத்தின் தனிக்குணமும் போர்க்குணமும்  இந்திய அரங்கில் தனி முத்திரையுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் நிலைநிறுத்தப்பட்டுள்ளதை எண்ணி கூட்டம் பெருமை கொள்கிறது.

* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரிடமும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் ஒருமுகமாக நின்று, மத்திய-மாநில அரசுகளின் அதிகார அத்துமீறல்கள் அனைத்தையும், அரசு இயந்திர துஷ்பிரயோகங்களையும் மன உறுதியுடன் எதிர்கொண்டு தமிழக வாக்காளர்களையும், புதுச்சேரி வாக்காளர்களையும் சந்தித்து இந்த அமோக வெற்றியை  ஈட்டியுள்ளதற்கு  இந்த கூட்டம் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. வாக்காளர்களிடம் வாக்குக் கேட்கச் சென்ற அதே முனைப்புடனும்-ஆர்வத்துடனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்-இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள், ஒவ்வொருவரும் தத்தமது தொகுதிகளில் தவறாமல் வாக்களித்தவர்கள்  -வாக்களிக்காதவர்கள் என்ற பேதம் பார்க்காமல், அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்திட வேண்டும். இந்த மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், பெருமை சேர்க்கும் வகையில் தொகுதிப்  பணி மற்றும் நாடாளுமன்றப் பணியாற்றிட வேண்டுமென்று திமுக  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

* அதிமுக அரசால்    தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீர்  15 ரூபாய்க்கு விற்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை லாரி டேங்கர் மூலம் குடிநீர் சப்ளை செய்யும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. மாநிலம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் - தாய்மார்கள் சாலை மறியலில் ஈடுபடும் காட்சிகள், குடிநீர்ப்  பிரச்னை எந்த அளவிற்கு தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க ஆளும் அதிமுக அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் போன்ற தொலைநோக்குத் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும்.

* இந்தியா முழுவதும் இந்தி கட்டாய பாடம் ஆக்கப்படும் என்ற செய்தி பரவியது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர்கள் அந்த அறிக்கையை, பலரையும் கலந்து ஆலோசித்த பிறகுதான், செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இது தமிழர்களை உரசிப் பார்க்கும் செயலாகும். பன்மொழி, பண்பாட்டோடு விளங்கும் ஒரு நாட்டில் மக்களின் கருத்துகளை அறியாமல் மத்திய அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளாது என நம்புகிறோம். அதைப்போல, தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம் என்று மத்திய பாஜக அரசை கூட்டம் கேட்டுக் கொள்வதோடு; தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு முடிவுகளையும், அது எந்த நேரத்தில் வந்தாலும் திமுக ஜனநாயக வழி நின்று மிகக் கடுமையாக எதிர்க்கும்.

* நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட வேண்டிய காவிரி டெல்டா மாவட்டங்களை, வறண்ட பாலைவனமாக்கும் விதத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அறிவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளையும்,  அதற்கு அட்சரம் பிசகாமல் துணை போகும் அ.தி.மு.க. அரசையும் கூட்டம் வன்மையாகக்  கண்டிக்கிறது. ஆகவே விவசாயிகளின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, மறுசிந்தனை ஏதுமின்றி, திரும்பப் பெற வேண்டும் என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாக” உடனடியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூன்றாவது தனிப்பெரும் கட்சி

இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நாடாளுமன்றத்தில்,  திமுக இந்தியாவின் மூன்றாவது தனிப்பெரும் கட்சி என்று திமுக தலைவர் தலைமையில் கம்பீரமாக நிற்பதை இந்திய ஜனநாயகமும் பார்த்து மகிழ்கிறது-அதை இந்த கூட்டமும் எண்ணிப் பெருமிதம் கொள்கிறது.

Tags : District Secretaries ,MK Stalin , MK Stalin, District Secretaries, MP, Central government
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...