×

கொடைக்கானல் கோடை விழாவில் அலங்காரப் படகுகள் அணிவகுப்பு

கொடைக்கானல்: கோடை விழாவின் ஒருபகுதியாக கொடைக்கானலில் நேற்று படகு அலங்கார அணிவகுப்பு மற்றும் விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றன.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா கடந்த 30ம் தேதி தொடங்கியது. நான்காம் நாளான நேற்று சுற்றுலாத்துறை சார்பில்  அலங்காரப் படகு அணிவகுப்பு நடத்தப்பட்டது. மீன்வளத்துறை, தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத்துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய அரசு  துறைகள் சார்பில் படகுகள் அலங்காரம் செய்யப்பட்டு ஏரியில் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

 ஒவ்வொரு துறையும் அவர்களது துறை சார்ந்த முக்கிய நிகழ்வுகளை வெளிப்படுத்தும் விதமாக படகுகளை அலங்காரம் செய்திருந்தனர். இந்த  அலங்கார படகு அணிவகுப்பை மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்களால்  அலங்கரிக்கப்பட்ட ‘மோட்டு - பட்லு’ கார்ட்டூன் பொம்மை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்தது.இதேபோல் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் பிரையண்ட் பூங்காவில் மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி, சாக்கு பையை மாட்டிக்கொண்டு  ஓடும் போட்டி, சிலம்ப போட்டிகள் நடந்தன. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். 8ம் தேதி வரை கோடை விழா விளையாட்டு  போட்டிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Tags : Kodikanal Summer Festival , Kodaikanal, summer , Decorative boats
× RELATED கொடைக்கானல் கோடை விழா மீன் பிடிக்கும்...