தும்கா: ஜார்கண்டில் நக்சல்களுடன் நடந்த சண்டையில் வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 4 வீரர்கள் காயமடைந்தனர். ஜார்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை அங்கு சென்ற வீரர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த சண்டையில் ஷாஷாத்ரா சீமா பால் சிறப்பு படையைச் சேர்ந்த வீரர் நீரஜ் சேட்ரி வீர மரணம் அடைந்தார். ராஜேஷ் குமார், சதீஷ் குஜர், சோனு குமார், மற்றும் கரண் குமார் ஆகிய 4 வீரர்கள் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு காயங்களுடன் தப்பிய 5 நக்சல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.