×

கல்வி நிலையத்தை சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் பீடி, சிகரெட்களை விற்கும் கடைகளுக்கு பள்ளி முதல்வரே அபராதம் விதிக்கலாம்: மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: இளம்பருவத்தினர் மத்தியில் புகையிலை பயன்பாட்டை தடுக்க, அனைத்து கல்வி நிலையங்களிலும், குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில்,  மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய புகையிலை கண்காணிப்பு குழுவை அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. .உலக புகையிலை ஒழிப்பு தினம் கடந்த மாதம் 31ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பள்ளி, கல்லூரிகளுக்கு மத்திய சுகாதார  அமைச்சகத்தால் வழங்கப்படும் ‘புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள்’ சான்றிதழுக்கான வழிகாட்டு நெறிமுறையில் சில திருத்தங்கள்  மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

* பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் 100 மீட்டர் சுற்றளவில் புகையிலை பொருட்கள் விற்க அனுமதிக்கக் கூடாது. இதை கல்வி நிறுவனம்  உறுதிப்படுத்த வேண்டும். மீறினால் 1800-11-2356 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.
* 100 மீட்டர் சுற்றளவுக்குள் புகையிலை பொருட்கள் விற்றால், விதிமீறல் சட்டப்பிரிவு 6(பி)ன் கீழ் கல்வி நிறுவன தலைவரே அபராதம்  வசூலிக்கலாம். மேலும், போலீஸ், பெற்றோர், சுற்றுப்புற மக்கள் உதவியுடன் புகையிலை பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.
* புகையிலை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அல்லது அவற்றை சார்ந்த நிறுவனங்கள் நடத்தும் எந்த ஒரு போட்டியிலும் கல்வி  நிறுவனங்கள் பங்கேற்க கூடாது. அந்நிறுவனங்கள் அளிக்கும் பரிசுகளையோ, படிப்பு நிதியுதவிகளையோ ஏற்கக் கூடாது.
* அரசின் வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றி புகையிலை ஒழிப்பில் பங்கேற்கும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் ‘புகையிலை இல்லா  கல்வி  நிறுவனம்’ சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும்.
* புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றல், போஸ்டர், வாசகம், வினாடிவினா போன்ற போட்டிகளை நடத்தி மாணவர்களுக்கு பரிசளித்தல் போன்ற  விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். கல்வி நிறுவன வளாகத்தில் அனைவரின் கண்ணில் படும்  பகுதிகளில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைக்கலாம்.இத்தகைய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

*  2016-17 ஆய்வின்படி, இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளம்பருவத்தினரில் 28.6 சதவீதம் பேர் புகையிலை  பயன்படுத்துகின்றனர்.
* நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பயன்பாட்டால் 13 லட்சம் பேர் இறக்கின்றனர்.
* புகையிலை பயன்பாட்டால் ஆண்டுதோறும் 37 லட்சம் பேர் நுரையீரல் பாதிப்பாலும், 1.5 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.

அனைத்து பள்ளி, கல்லூரிகளில்புகையிலை கண்காணிப்பு குழு
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறையில் இடம் பெற்றுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்:
* அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் (9ம் வகுப்பு முதல்) மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய புகையிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட  வேண்டும். குறிப்பாக, நடுநிலைப் பள்ளிகளில் இருந்தே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்காணிப்பு குழுவில் இடம்  பெற்றிருப்பவர்களின் பெயர்கள் அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும்.
* கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் புகையிலை பயன்படுத்துபவர்களாக இருக்கக் கூடாது. இ-சிகரெட் உள்ளிட்ட ஏனைய பிற  புகையிலை சம்மந்தமான பொருட்களையும் அவர்கள் பயன்படுத்தாததை உறுதி செய்ய வேண்டும்.



Tags : School Principal ,shops ,education center , Around 100 meters , Beady,cigarettes, Union health ministry, orders
× RELATED குப்புரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி