போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு 5 டன் மாங்காய்கள் உதிர்ந்தன.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் லேசான மழையுடன் சூறைக்காற்று வீசியது. போச்சம்பள்ளி அருகே கோட்டானூர் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு வீசிய சூறைக்காற்றில் விவசாயி ஒருவரது பசுமை குடிலின் கூரை கிழிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதேபோல், மலையாண்டஅள்ளி பகுதியில் கூலி தொழிலாளியின் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், கோட்டானூர் பகுதியில் 7 மின்கம்பங்கள் காற்றுக்கு சாய்ந்ததால், பலமணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால், விடிய, விடிய மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். சூறைகாற்றுக்கு, பல்வேறு இடங்களில் தென்னை, வேம்பு, மா மரங்கள் முறிந்து விழுந்தன. இதில், 5 டன் அளவுக்கு மாங்காய்கள் உதிர்ந்தன.