சேலம்: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள மாவெலிப்பாளைத்தில் கடந்த மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் அடுத்தடுத்து 6 ரயில்களில், 13 பெண்களிடம் 37 பவுன் நகையை வடமாநில கொள்ளை கும்பல் பறித்துச் சென்றது. குற்றவாளிகளை பிடிக்க மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூருக்கு தனிப்படையினர் சென்றனர். இதனிடையே, நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஈரோடு ரயில்வே போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவர்கள், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த பாலாஜி சங்கர் ஷிண்டே, தானாஜி மன்மத் ஷிண்டே, சுனில் மன்மத் ஷிண்டே, பப்பு ஈஸ்வர் எனத் தெரியவந்தது. அவர்களுடன் மேலும் 2 பேர், இக்கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிந்தது. இவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.இக்கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 2 பேர், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, ரயில்வே தனிப்படை போலீசார் சோலாப்பூரில் முகாமிட்டுள்ளனர்.