* சாமர்த்தியமாக ரயிலை நிறுத்திய ஓட்டுனர்
* அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
சென்னை: தண்டவாளத்தில் 20 கிலோ எடையுள்ள பாறாங்கல்லை வைத்து வேளச்சேரி பறக்கும் ரயிலை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் வேளச்சேரி மார்க்கத்தில் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது கோட்டை- பூங்கா நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 20 கிலோ எடையுள்ள பாறாங்கல் கிடந்தது. இதை ரயில் ஓட்டுநர் தூரத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதை தொடர்ந்து சுதாரித்து கொண்ட அவர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். அதன் பின்னர் ரயிலில் இருந்து இறங்கி சென்று தண்டவாளத்தில் இருந்த கல்லை இருந்து அகற்றினார். பின்னர் வேளச்சேரி நோக்கி ரயிலை எடுத்துச் சென்றார்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து ரயில்வே ஓட்டுனர் உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து எழும்பூர் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசில் ரயில்வே அதிகாரிகள் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குடிபோதையில் மர்ம நபர்கள் செய்த விஷம செயலா? அல்லது தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி செய்தனரா? என்ற கோணத்தில் எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.இந்த நிலையில் தண்டவாளத்தில் கிடந்த கல்லை பார்த்து ஓட்டுனர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இச்சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.