சென்னை : கர்நாடகாவில் தொடங்கிய 108 வைணவ திவ்ய தேசங்கள் பயணதிட்டத்தின்படி நேபாளம் வழியில் செல்லும் கிருஷ்ணர் ரத யாத்திரை மாமல்லபுரம் வந்தது.
கர்நாடகா மாநிலம், மைசூர் அருகில் உள்ள மேல்கோட்டை அருகில் உள்ள அனந்தாஸ்ரம் மடம் சார்பில், நேபாளம் தலைநகர் காத்மாண்டு அருகில் 20 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள முக்திநாத் மலை மீது உள்ள தாமோதரகுண்டத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோயிலில் வருகிற ஜூன் 27ம் தேதி அன்று கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இதற்காக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரில் மார்பில் கல்லில் 4 அடி உயரத்தில் புல்லாங்குழல் ஊதும் கோலத்தில் கிருஷ்ணர் சிலை வடிவமைக்கப்பட்டது.
இதையடுத்து இச்சிலையுடன் கூடிய ரத யாத்திரை கடந்த மே 19ம் தேதி, மைசூர் மேல்கோட்டை பகுதியில் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 108 வைணவ திவ்ய ஸ்தலங்கள் உள்ள ஊர் வழியாகச் சென்று வருகிற ஜூன் 27ல் இந்த ரதயாத்திரை நேபாளம் சென்றடைகிறது. அன்று இந்த கிருஷ்ணர் சிலை அங்குள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் தமிழகத்தில் 108 வைணவ ஸ்தலம் 63வது கோயிலான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு இந்த ரத யாத்திரை வந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு இந்த ரத யாத்திரை குழுவை வரவேற்றார். ரத யாத்திரை குழுவில் வந்த மேல் கோட்டை சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், மன்னார்குடி சென்டலங்கார மன்னர் ஜீயர் சுவாமிகள், நியூயார்க் கிருஷ்ண எதிந்திர மகன தேசிகர் ஜீயர் சுவாமிகள், நேபாளம் பராங்குசம் ஜீயர் சுவாமிகள் ஆகிய ஜீயர்கள் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ரத யாத்திரை குழுவில் வந்த அவர்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் தலசயன பெருமாள் கோயில் வைணவ பட்டர்கள், கோயில் பணியாளர்கள் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் இந்த ரத யாத்திரை இ.சி.ஆர். சாலை வழியாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்றது. வழி நெடுகிலும் ரதத்தில் உள்ள கிருஷ்ணரை பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.