டெல்லி: டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவுச் சின்னத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார். சீனாவுக்கும் இந்தியாவுக்கு இடையில் கடந்த 1959-ம் நடைபெற்ற மோதலில் 10 போலீசார் உயிரிழந்தனர். அவர்களையும், சுதந்திரத்துக்கு பின்னர் நாடு முழுவதும் கடமையின்போது வீரமரணம் அடைந்த சுமார் 35 ஆயிரம் போலீசாருக்காக டெல்லி சானக்புரி பகுதியில் மிக பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைத்தார். மக்களவைத் தேர்தலில் வெறறி பெற்ற பாஜ , கடந்த வியாழனன்று பதவியேற்றது.
பிரதமர் மோடி, அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட இலாகாக்களில் பொறுப்பேற்று வருகின்றனர். உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பாஜ தலைவர் அமித்ஷா, நேற்று தனது பொறுப்பை ஏற்றார். இதனை தொடர்ந்து இன்று தேசிய காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் காவல் அதிகாரிகளும் சென்று மரியாதை செலுத்தினர். போலீஸ் நினைவிடத்தில் கடமையின்போது உயிர்நீத்த காவல் துறையினருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.