நாகர்கோவில்: தமிழக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பணியிட மாறுதல் பெற்றும், இதுநாள் வரையில் பணியில் இருந்து விடுவிக்கப்படாத ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை ஜூன் 1ம் தேதிக்கு பின்னர் பணியில் இருந்து விடுவித்து ஜூன் 6ம் தேதிக்குள் அவரவர் மாறுதல் பெற்ற பள்ளிகளில் சேர்த்து பணிபுரிய உரிய அனுமதி வழங்கிட தொடக்க கல்வி இயக்குநருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆசிரியர் மாறுதல் பதிவுகள் யாவும் கல்வி தகவல் மேலாண்மை முறையில் (இஎம்ஐஎஸ்) பதிவு செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜூன் 2018ல் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல் பெற்றும், இதுநாள் வரையில் பணியில் இருந்து விடுவிக்கப்படாத ஈராசிரியர் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை ஜூன் 1ம் தேதிக்கு பின்னர் விடுவித்து 6ம் தேதிக்குள் அவரவர் மாறுதல் பெற்ற பள்ளிகளில் சேர்ந்து பணிபுரியும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.