புதுடெல்லி: ஐ.மு. கூட்டணி ஆட்சியில் ஏர் இந்தியாவில் நடந்த முறைகேடு பற்றிய விசாரணைக்கு வரும் 6ம் தேதி ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி ஆட்சியில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பிரபுல் குமார். இவரது பதவிக் காலத்தில் ஏர் இந்தியா பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதற்கான காரணங்கள் குறித்து அமலாக்கத்துறை ஆராய்ந்தது. அதில், லாபகரமான சர்வதேச வழித்தடங்கள் மற்றும் பயண நேரத்தை, கத்தார் ஏர்வேஸ், எமிரேட்ஸ், ஏர் அரேபியா போன்ற வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் விட்டுக் கொடுத்ததுதான் காரணம் என கண்டறியப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக தீபக் தல்வார் என்பவரை அமலாக்கத் துறை கைது செய்தது. இவர்தான் எமிரேட்ஸ் மற்றும் ஏர் அரேபியா நிறுவனங்கள் சார்பில், முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருவருக்கும் இடையேயான இ-மெயில் ஆதாரங்களும் அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளன. எனவே, இது பற்றிய விசாரணைக்கு வரும் 6ம் தேதி ஆஜராகும்படி பிரபுல் படேலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முழு ஒத்துழைப்பு அளிப்பேன்:
சம்மன் குறித்து மும்பையில் பேட்டியளித்த பிரபுல் படேல், ‘‘அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பதில் மகிழ்ச்சி அடைவேன். அப்போதுதான் விமான போக்குவரத்து துறையில் உள்ள சிக்கலான விஷயங்களை அமலாக்கத்துறை புரிந்து கொள்ள முடியும்,’’ என்றார்.