பிதோராகார்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நந்ததேவி சிகரத்துக்கு சென்ற 7 வெளிநாட்டினர் உள்பட 8 பேர் மாயமாகி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம், பிதோராகார் மாவட்டத்தில் உள்ள நந்ததேவி கிழக்கு சிகரத்துக்கு மலையேற்றக் குழுவினர் புறப்பட்டு சென்றனர். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த 7 பேர் மற்றும் இந்திய மலையேற்ற நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவரும் அதில் இடம் பெற்றனர். 7,434 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தை தொட கடந்த மே 13ம் தேதி அவர்கள் முன்சியாரி பகுதியில் இருந்து புறப்பட்டனர்.
சிகரத்தில் இருந்து திரும்பும் வழியில் கடந்த மே 25ம் தேதி 8 பேரும் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர்களை மீட்பதற்காக 14 பேர் கொண்ட குழுவை மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ளது. இதில் மருத்துவ குழுவினர், போலீசார் மற்றும் உள்ளூர் மக்களும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், மாநில பேரிடர் அதிரடிப்படையும் டேரோடூனில் இருந்து ஹெலிகாப்டரில் தேடுதல் பணியை துவக்கியது. மோசமான வானிலை காரணமாக வான்வெளி தேடுதல் வேட்டையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.