×

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து அழகுக்காக பெயர்த்து செல்லப்படும் ஈச்சமரங்கள் பன்னாட்டு மோகத்தால் கிராமங்களில் அழியும் அபாயம்

சென்னை: பன்னாட்டு மோகத்தால் அழகுக்காக வளர்க்க திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து, ஈச்சமரங்கள் வேரோடு பெயர்த்து எடுத்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், வறட்சியை தாங்கும் ஈச்சமரங்கள் முற்றிலும் அழிந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் படையெடுப்பதற்கு முன்புவரை ஈச்ச மரங்கள் புதர்களிலும், ஓடைகளிலும் மட்டுமே காணப்படும். சமீப காலங்களாக ஈச்ச மரத்தை தங்கள் கட்டடங்களுக்கு அருகே வளர்த்து அழகு பார்க்க  ஸ்டார் ஹோட்டல்கள், சாப்ட்வேர் கம்பெனிகள்  தொடங்கிவிட்டனர். ஐவகை நிலங்களில் பனை, தென்னையுடன் சேர்ந்து ஈச்ச மரங்களும் செழித்தோங்கியதாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். விவசாயம் தோன்றும் முன்னரே இவ்வகை மரங்களை தமிழர்கள் பயன்படுத்தத் தொடங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும்போது புதர்களில் காணப்படும் ஈச்சம்பழத்தைப் பறித்த ஞாபகம் இந்தத் தலைமுறை மாணவர்களிடம் கிடையாது. பெரிய அளவில் கொட்டையும், குறைவான தடிமனில் சதைப் பகுதியும் இருக்கும். அதிக இனிப்பு சுவை கொண்டிருக்கும்.

கிராமங்களில் பெரிய மரங்களில் வளரும் ஈச்சங்காய்களை வெட்டியெடுத்து வந்து பானையில் பழுக்க வைப்பார்கள். வெளிநாட்டு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்வதைத் தொடர்ந்து, உள்நாட்டு ஈச்சம்பழங்களுக்கு மவுசு குறைந்துவிட்டது. அரபுநாடுகளிலிருந்து விதவிதமான பேரீட்சை ரகங்கள் வரத்தொடங்கிவிட்டன. பனைமரத்தை போல ஈச்சமரத்திற்கு பெரிய அளவில் தண்ணீர் தேவைப்படாது. முட்கள் நிறைந்த இலைகள், தென்னையைப் போன்ற குலைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தென்னை, பனையைப் போன்று இதிலிருந்தும் கள் இறக்கலாம். கற்கண்டு தயாரிக்கலாம். ஈச்ச ஓலைகளைக் கொண்டு பாய், துடைப்பம் உள்ளிட்ட பொருள்களைச் செய்வார்கள். மட்டைகளில் கூடை முடைவார்கள். தூக்கனாங்குருவிகள் ஈச்ச மர ஓலை நுனியில் கூடுகட்டும். சமீபகாலமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் பெரிய, பெரிய ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களின் வரத்து அதிகரித்துள்ளது. வளர்ந்த ஈச்சமரங்களை வேரோடு வெட்டியெடுத்து அழகுபடுத்த நினைக்கிறார்கள். இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கிராமங்களில் உள்ள  ஈச்சமரங்கள் வேட்டையாடப்படுகின்றன.

அரசு நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் இருக்கும் மரங்கள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு தோண்டி எடுக்கப்படுகின்றன. அங்கிருந்து வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு பல்வேறு நிறுவனங்களில் அழகுக்காக நடப்படுகின்றன. இதனால் ஈச்சமரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மரங்கள் என்பது கட்டிடத்திற்கு அழகுதான். ஆனால், அவை இயற்கையாக வளரும் இடங்களிலிருந்து தேவையில்லாமல் இடமாற்றம் செய்யக் கூடாது. மூங்கில் அதிக அளவு ஆக்சிஜன் கொடுக்கக் கூடியது என்பதால் சில சாப்ட்வேர் கம்பெனிகளில் மூங்கில் மரங்களை வளர்க்கிறார்கள். மேலை நாடுகளில் உள்ளது போல் ஈச்சமர கலாசாரம் இங்கே பரவிவிட்டது.

வறட்சியை தாங்கும் ஈச்ச மரம்

தமிழகத்தின் வட பகுதியில் இருந்து தென்பகுதி வரை எல்லா இடங்களிலும் காணப்படும் மரங்களாக பனை, ஈச்ச மரங்கள் உள்ளன. இரண்டும் வறட்சியை சமாளித்து வளரக் கூடியவை. இந்த மரங்களை விவசாய நிலங்களின் ஓரம் இயற்கை மதிலாகவும், வரப்புகளை பிரிக்கும் எல்லை மரங்களாகவும் நட்டு வளர்த்து வந்தனர். தானாக வளரும் ஈச்ச மரங்களை சமீப ஆண்டுகளாக வரப்பு எல்லைகளில் நடுவதும், இருக்கின்ற மரங்களை பாதுகாப்பதும் குறைந்து வருகிறது. ஈச்சமரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை இரும்பு சத்து மிக்க பழங்களை தரும். இவற்றை சேகரித்து நகர் புறங்களில் விற்பனை செய்து வந்தனர்.

ஈச்ச பழங்களை கொத்து, கொத்தாக
திருவிழாக்களின்போது தேர்களில் கட்டி அலங்காரம் செய்து வந்தனர். சமீப ஆண்டுகளாக ஈச்சம் பழங்கள் விற்பனை செய்வது குறைந்து வருகிறது. சத்து மிக்க இந்த பழங்கள் மரத்திலேயே பழுத்து தானாக கீழே விழுந்து வீணாகி வருகின்றன. இதில் பெரிய அளவில் வருவாய் இல்லை என்பதால் இவற்றை பாதுகாப்பதில் விவசாயிகள் அக்கறை காட்டுவதில்லை. வெயில் காலத்திலும் பசுமையாக காட்சி தரும், இந்த மரங்களை சமீப ஆண்டுகளாக நட்சத்திர ஓட்டல்களின் பூங்காக்களில் வைத்து பராமரித்து வருகின்றனர். இதற்காக கிராமங்களில் வளர்ந்து செழிப்பாக உள்ள மரங்களை வேருடன் பிடுங்கி எடுத்து சென்று பராமரிக்கின்றனர். ஈச்ச மரங்களை புதிதாக நட்டு வளர்ப்பதிலும் விவசாயிகள் அக்கறை காட்டாமல் போனதால், கிராமப்புறங்களில் இவை வேகமாக அழிந்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு ஈச்சமரங்களை நகர் புறங்களில் பூங்காக்களில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது.

ஈச்சம் பழங்களை சாப்பிடுவதால் நன்மைகள்

மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினமும் மூன்று வேளை உணவை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ஈச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளுக்கு உறுதித்தன்மை அளிக்கிறது. கண்களின் பார்வை திறன் மேம்படும். கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும். ஈச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தினால் நரம்புகள் வலுப்பெற்று, ஆண்மை குறைபாடுகள் நீங்கும். தினமும் மூன்று வேலை சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு நிற்கும். ஈச்சம் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்.

Tags : Thiruvallur ,Kanchipuram Districts ,areas , Traveling from Thiruvallur ,Kanchipuram Districts ,end of rural areas
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...