வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த புகழ்பெற்ற ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் 6 இந்திய வம்சாவளி மாணவர்கள் உட்பட 8 பேர் மகுடம் சூடினர். அவர்களுக்கு தலா ரூ.35 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை ‘ஸ்பெல்லிங் பீ’ எனப்படும் எழுத்துக்களை உச்சரிக்கும் போட்டி நடைபெற்றது. இதில், 7 வயது முதல் 14 வயது வரையிலான 565 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அமெரிக்கா தவிர கனடா, கானா, ஜமைக்கா நாடுகளை சேர்ந்தவர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர். இதில், இறுதி கட்டமாக 47 வார்த்தைகளுக்கான எழுத்துக்களை மிகச்சரியாக சொல்லி 8 பேர் பரிசு பெற்றனர். இவர்களில் 6 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.
கலிபோர்னியாவை சேர்ந்த ரிஷிக் காந்தஸ்ரீ, மேரிலேண்ட்டின் சகேத் சுந்தர், நியுஜெர்சியின் ஸ்ருதிகா பதி, கிறிஸ்டோபர் ஷெரோ, டெக்சாசை சேர்ந்த சோகும் சுகாதங்கர், அபிஜய் கோடாலி, ரோஹன் ராஜா, அலபாமாவின் எரின் ஹோவர்டு ஆகியோர் இப்போட்டியில் வெற்றி பெற்றனர். கடந்த 94 ஆண்டு கால வரலாற்றில் 2க்கும் மேற்பட்டோர் முதல்முறையாக ஸ்பெல்லிங் பீ போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை. இவர்கள் தல ரூ.35 லட்சம் பணத்தை பரிசாக பெற்றனர்.