புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 2019 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் நுழைவு தேர்வு வருகிற ஜூன் 2ம் தேதி காலை, மதியம் என இரண்டு வேளைகளாக நடைபெறவுள்ளது. 150 இடங்கள் ஜிப்மர் புதுச்சேரிக்கும், 50 இடங்கள் ஜிப்மர் காரைக்காலுக்கும் என மொத்தம் 200 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 84 ஆயிரத்து 272 மாணவர்கள் பங்கு பெறும் இந்த தேர்வில் காலை வேளையில் 94 ஆயிரத்து 73 பேரும், மதிய வேளையில் 90 ஆயிரத்து 199 மாணவர்களும் பங்கு பெறுகின்றனர்.
தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரையும் நடக்கவுள்ளது. காலை 9.30 மணிக்கு மேல் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தாமதமாக வரும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும். நாடு முழுவதும் 25 மாநிலங்களில் 132 நகரங்களில் உள்ள 280 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. புதுவையில் உள்ள 7 மையங்களில் 2,279 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு முடிவுகள் ஜூன் 21ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.