×

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர் சாவு

* அணுகுண்டு வெடி தயாரித்தபோது பரிதாபம்

சாத்தூர் : வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் கருகி பலியாகினர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வெம்பக்கோட்டை அருகே துலுக்கன்குறிச்சியில் இயங்கி வருகிறது. இங்கு 100 அறைகள் உள்ளன. ஆலையில் செவல்பட்டி, அம்மையாபட்டி, துலுக்கன்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 345 தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு பேன்ஸி ரகம் உட்பட அனைத்து வகை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.

alignment=


ஆலையில் நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அம்மையாபட்டி சுந்தர்ராஜ் (58), துலுக்கன்குறிச்சி முருகேசன் (54) ஆகியோர் ஒரு அறையில் அணுகுண்டு வெடிக்கு மருந்து கலவை செலுத்தினர். அப்போது, உராய்வு ஏற்பட்டு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடித்து சிதறின. இதில் அந்த அறையே இடிந்து தரைமட்டமானது. மற்ற அறைகளில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

விபத்தில் சிக்கிய சுந்தர்ராஜூ, முருகேசன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெம்பக்கோட்டை, சாத்தூரில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.பலியான சுந்தர்ராஜ், முருகேசன் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவகாசி போலீசார், ஆலை உரிமையாளர் ஜெயசங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Vembukottai , Vempakkottai ,Fire factory,accident ,Labors death
× RELATED ஏழாயிரம்பண்ணை வழியாக...