×

பார் உரிமையாளர் தற்கொலை விவகாரம்: மாமல்லபுரம் ஆய்வாளர் ரவிக்குமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

காஞ்சிபுரம்: பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் காஞ்சி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அடுத்த ஆழ்வார் குறிச்சியை சேர்ந்தவர் நெல்லையப்பன்(35). இவர், திருப்போரூரில் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான மதுபானக் கடை பார்களை எடுத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் அதிக வாடகை வாங்குவதாக திருப்போரூர் காவல்நிலையம் மற்றும் மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளார். மேலும், திருப்போரூர் ஆய்வாளர் கண்ணன் மற்றும் மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்புராஜ் தன்னை கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்குவதாக நெல்லையப்பன் புகார் தெரிவித்திருந்தார்.

பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த நெல்லையப்பன் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் திருப்போரூர், மாமல்லபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலை செய்வதற்கு முன்பாக நெல்லையப்பன் தனது முகநூலில் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தனது தற்கொலைக்கான காரணம் மாமல்லபுர டி.எஸ்.பி மற்றும் திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் ஆனந்தன் ஆகிய மூன்று பேர் தான் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதிவிட்டிருந்தார். நெல்லையப்பனின் முகநூல் பதிவையடுத்து திருப்போரூர் ஆய்வாளர் கண்ணன் மீது காஞ்சிபுரம் எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆய்வாளராக இருந்த கண்ணன் தற்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், டி.எஸ்.பி. சுப்புராஜ் மற்றும், கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் காஞ்சி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மாமல்லபுரம் காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில், மேலும் 28 காவல் நிலையங்கள் மீது நடவடிக்கை பாயலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த நடவடிக்கைகளால் டாஸ்மாக் பாரில் லஞ்சம் வாங்கிய காவல்துறையினர் கலக்கமடைந்துள்ளனர்.


Tags : Ravikumar ,Mamallapuram ,police control room , Bar owner, suicide, mamallapuram, analyst, change
× RELATED புதுச்சேரியில் பாஜக பிரமுகர்...