×

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சந்திப்பு

புதுடெல்லி: டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக நேற்று பதவியேற்றார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நேற்று மாலை இவருக்கு பதவி பிரமாணம் செய்யப்பட்டது. தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பூட்டான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தலைவர்கள் பங்கேற்றனர். அதேபோல, பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் சிறிசேனாவும் கலந்து கொண்டார். இதையடுத்து, இன்று பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சிறிசேனா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

டெல்லியில் உள்ள மோடியின் ஹைதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இலங்கை தமிழர்கள் சந்தித்து வரும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட வேண்டும் என தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் அதில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கை மற்றும் இந்தியா ஒருங்கிணைத்து செயல்படுவது குறித்து பேசப்படலாம். மேலும் இரு நாட்டின் வர்த்தக விஷயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Maithripala Sirisena ,Narendra Modi ,Sri Lankan ,Delhi , Prime Minister Narendra Modi, Sri Lankan President, Maithripala Sirisena, Meeting, Delhi
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...