சென்னை: டெல்லியில் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இருந்து நேற்று காலை 11.20 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அண்ணா கூறியதுபோல், பதவி என்பது முக்கியமல்ல. கட்சிதான் முக்கியம். பதவி என்பது 2ம் பட்சம்தான். பதவிக்காக யாரையும் அணுகிக் கொண்டோ, தாங்கிக் கொண்டோ இருக்கமாட்டோம். அதேநேரத்தில் மத்திய அமைச்சரவையில் பங்குபெறுவது என்ற ஒரு நிலை வந்தால், அவர்கள் அழைத்தால், அப்போது, மத்திய அமைச்சர் பதவிபற்றி கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ள, நதிகள் இணைப்பு என்பது சாத்தியமான ஒரு திட்டம்தான். அதை செயல்படுத்தினால் நன்றாகத்தான் இருக்கும். டிடிவி. தினகரன், கதாநாயகனாக தன்னை சித்தரிப்பதற்காக கோடி கோடியாக செலவு செய்து முயற்சித்து பார்த்தார். அவருடைய திட்டம் பலிக்கவில்லை. பணபலத்தால் ஹீரோ ஆகிவிடலாம் என்று நினைத்தார். ஜீரோ ஆகிவிட்டார். பத்திரிகையாளரை என்ன ஜாதி என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டது எந்த அர்த்தத்தில் கேட்டார் என்று தெரியவில்லை. என்னை பொருத்தவரையில் இரண்டே ஜாதிகள்தான். ஒன்று ஆண் ஜாதி, மற்றொன்று பெண் ஜாதி. காவிரி ஆணைய உத்தரவிட்டபடி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முறையாக கர்நாடகா அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.