புதுடெல்லி: மத்திய அமைச்சராக பதிவியேற்க உள்ளவர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் 17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் பிரதமராக மோடி நாளை (மே 30) இரவு 7 மணி அளவில் பதவியேற்கிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் நடைபெறுகிறது. அப்போது, பிரதமராக மோடி பதவியேற்றவுடன், அவரது அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பல்வேறு பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள், தேசியக் கட்சிகளின் மாநில தலைவர்கள், துறை சார்ந்த பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பலதரப்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (பிம்ஸ்டெக்) தலைவர்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர். வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் தலைவர்கள். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக இப்போதுள்ள கிர்கிஸ்தான், மொரீசியஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
பல்வேறு நாட்டு தலைவர்களும், மாநில முதல்வர்களும், அரசியல் தலைவர்கள் வெற்றிபெற்ற எம்.பி.க்கள், சினிமா பிரபலங்கள் டெல்லி வந்த வண்ணம் உள்ளனர். மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளவர்களை இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமாக ரவீந்திரநாத்குமாருக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. ரவீந்திரநாத்குமார் இன்று மத்திய இணையமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.