×

திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம் பேன்சி ஸ்டோரில் கருக்கலைப்பு மையம்

* போலி டாக்டர் தம்பதி சிக்கினர்
* 4,000 சிசுக்கள் கொலை அம்பலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பேன்சி ஸ்டோரில் கருக்கலைப்பு மையம் நடத்திய போலி டாக்டர் தம்பதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூலம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் சிசுக்கள் கருவிலேயே  கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில், சட்ட விரோத கருக்கலைப்பு மையம் செயல்படுவதாக கிடைத்த புகாரின்பேரில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்ரவர்த்தி  ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நேரடி ஆய்வு நடத்தினர்.அப்போது, பேன்சி ஸ்டோருக்கு உள்ளே சிறிய அறையில் படுக்கை வசதியுடன் கூடிய கருக்கலைப்பு மையம் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் அன்பரசி மற்றும் குழுவினர் அந்த அறையில்  சோதனை நடத்தி, கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, சட்டவிரோத கருக்கலைப்பு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.இதுதொடர்பாக, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் கொடுத்த புகாரின்பேரில், சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட, திருவண்ணாமலை கிருஷ்ணா நகரை சேர்ந்த போலி பெண் டாக்டர்  கவிதா (41), அவரது கணவர் பிரபு(45) ஆகியோரை  போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது, ஐபிசி 419, 420, 315 மற்றும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் ஆக்ட் 1956 15(3) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், போலி பெண் டாக்டர் கவிதா 10ம் வகுப்பும், அவரது கணவர் பிரபு பிளஸ் 2ம் படித்திருப்பதும், தன்னுடைய மெடிக்கல் ஷாப்பில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த குற்றத்துக்காக ஏற்கனவே இரண்டு முறை பிரபு கைது  செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.மேலும், போலி டாக்டர்களான கவிதா, பிரபு ஆகியோர் நடத்திய சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் நுழைவு பகுதியில், பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில், நாெளான்றுக்கு  சராசரியாக 2 அல்லது மூன்று பெண்கள் வந்து செல்வதும், ஒரு குறிப்பிட்ட சில நபர்கள் இவர்களை அழைத்து வருவதும் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.எனவே, அழைத்து வரும் நபர்கள் இடைத்தரகர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதோடு, சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தில், ஸ்கேன் ரிப்போர்ட்களும் சிக்கியிருக்கிறது. எனவே, ஸ்கேன் மூலம் பெண் குழந்தை என உறுதி  செய்த பிறகு, இங்கு கருக்கலைப்பு நடத்திருக்கலாம் என தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையம் செயல்பட்டிருப்பதால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் சிசுக்கள் கருவில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.மேலும், பெண் குழந்தைகள் வேண்டாம் என நினைக்கும் பெண்கள், திருமணத்துக்கு முன்பு கருவுறும் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் போன்றோர் இந்த கருக்கலைப்பு மையத்துக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், இது  தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

மேலும், கருக்கலைப்பு மையத்துடன் தொடர்புடைய இடைத்தரகர்கள், ஸ்கேன் சென்டர்கள் ஆகியவற்றையும் கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தில் கைப்பற்றிய செல்போன் எண்களின்  அடிப்படையில் விசாரணை நடக்கிறது. கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்களின் விபரங்களை எந்த வகையிலும் வெளியிடக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல், பல மாவட்டங்களில் இருந்து இடைத்தரகர்கள் இங்கு பெண்களை அழைத்து வந்திருப்பதும், ஒவ்வொரு பெண்ணிடமும் ₹5 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரை பணம் வசூலித்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  எனவே, தொடர் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

சரியும் பெண் குழந்தைகள்பிறப்பு விகிதம்
தேசிய குடும்ப நல சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்த மாவட்டங்களின் பட்டியலில், திருவண்ணாமலை மாவட்டம் தேசிய அளவில் 8வது இடத்தில் உள்ளது. கடந்த இங்கு  2012-2013ம் ஆண்டு புள்ளிவிபரப்படி, ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 930 பெண் குழந்தைகள் என்ற பிறப்பு விகிதம் இருந்தது. கடந்த ஆண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 874 ஆக சரிந்திருக்கிறது. எனவே, பெண் குழந்தைகள் கருவில்  அழிப்பது உறுதியாகியிருக்கிறது.

வெளிவராத மர்மங்கள் இன்னும் எத்தனையோ?
திருவண்ணாமலையில் பெண் சிசு கொலை தொடர்பாக ஏற்கனவே, மத்திய- மாநில அரசு அதிகாரிகள் குழு நடத்திய சோதனையில், 4 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இரண்டு பெண் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  ஸ்கேன் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அதைத்தொடர்ந்து, வேங்கிக்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான பெண் சிசுக்களை கருவில் அழித்த போலி பெண் டாக்டர் ஆனந்தி, அவரது கணவர் மற்றும் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டனர். ஆனந்தி இன்னமும் சிறையில் இருக்கிறார்.  ஆனாலும், ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் சட்டவிரோத கருக்கலைப்பும், பெண் சிசு கருவில் கொல்லப்படுவதும் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பல இடங்களில் சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள்  செயல்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு, இதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : incident ,abortion center ,Thiruvannamalai ,pencil store , Trauma,Thiruvannamalai, Abortion Center , Penny Store
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...