புதுடெல்லி: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா, லண்டனில் ரூ18 கோடியில் சொத்துகளை வாங்கினார். இதில், சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக வதேரா, மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக டெல்லி நீதிமன்றத்தில் வதேரா முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரியும், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரியும் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத் தாக்கல் செய்துள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகும்படி வதேராவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.