அய்சால்: மிசோரம் மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான அரசு அமைந்ததும் முழு மது விலக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மிசோரம் மதுவிலக்கு மசோதா கொண்டு வரப்பட்டு, கடந்த மார்ச் 20ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அம்மாநில ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். ஏப்ரல் 1ம் தேதி முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால், மதுவிலக்கை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து, நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், மிசோரமில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு முழு மது விலக்கு முறைப்படி அமலாகி உள்ளது. ஏற்கனவே மிசோரமில் 1984-1987 வரையிலும், பின்னர் 1997-2015 வரையிலும் குறிப்பிட்ட பகுதியில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மது விற்பனை மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60-70 கோடி வருவாய் கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.