ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் 4 சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 40 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகிலேயே அதிக சிறை கைதிகளை கொண்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவை அடுத்து பிரேசில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இங்குள்ள சிறைகளில் இரண்டு மடங்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு ஜூனில் 7,26,712 கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். 2018ம் ஆண்டு இறுதியில் கூடுதலாக 1,15,000 கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கலாம் என மனித உரிமைகள் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
சிறைகளில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கைதிகளுக்கு இடையே வன்முறை மற்றும் கலவரங்கள் ஏற்படுவது, சிறைகளை தகர்த்து தப்பித்து செல்வது உள்ளிட்ட முயற்சிகள் அவ்வப்போது நடப்பதும் இங்கு வழக்கமாகும். இந்நிலையில், நேற்று முன்தினம் 4 சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 40 கைதிகள் உயிரிழந்துள்ளனர். முதலில் 42 கைதிகள் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த எண்ணிக்கை 40 ஆக அறிவிக்கப்பட்டது.
அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரான மானாயஸ் நகரில் அமைந்துள்ள 4 சிறைகளிலும் திங்களன்று கலவரம் வெடித்தது. இதில், ஒரு சிறையில் மட்டும் 15 பேர் பலியானார்கள். மீதமுள்ள 3 சிறைகளில் 25 பேர் பலியானார்கள். போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.